ரத்தீஷுடன் தொடர்பில் இருந்த நடிகர், நடிகைகள், ஐபிஎஸ்கள் யார் யார்?… என பட்டியலிட்டு விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்ப அமலாக்கத்துறை தயாராகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் டாஸ்மாக் நிறுவனத்தில் நடைபெற்றுள்ள முறைகேடு பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனத்தில் சுமார் 1,000 கோடி ரூபாய் வரை முறைகேடுகள் நடந்திருப்பதாக அமலாக்கத்துறை (ED) விசாரணையில் கண்டு பிடித்துள்ளனர். டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக 10 முதல் 30 ரூபாய் வரை வசூலிக்கப்படுவதாகவும், அதற்கான முறையான ரசீதுகள் வழங்கப்படுவதில்லை என்றும், QR குறியீடு மற்றும் Google Pay போன்ற வசதிகள் இருந்தாலும், அங்கும் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.
டாஸ்மாக் நிறுவனத்தின் இயக்குநர் ஐஏஎஸ் அதிகாரி விசாகன் வீட்டில் நடந்த ரெய்டுக்குப் பிறகு முக்கிய ஆவணங்கள் அமலாக்கத்துறையின் கைகளில் சிக்கியதுதான் இந்த ரெய்டின் பெரிய திருப்புமுனையாக அமைந்து விட்டதாக கூறப்படுகிறது. விசாகன் என்ன வாக்குமூலம் கொடுத்தாரோ தெரியவில்லை, அதன் பிறகு அமலாக்கத்துறையின் அடுத்த ரெய்டு அணிவகுப்பு உதயநிதியின் நெருங்கிய கல்லூரி நண்பரும், தொழில் பார்ட்னருமான ரியல் எஸ்டேட் தொழில் அதிபர் ரத்தீஷ் வீட்டுக்கு திரும்பியது. அங்கு அமலாக்கத்துறை சென்ற போது ரத்தீஷ் இல்லை. வீடு பூட்டப்பட்டிருந்தது. சீல் வைத்து விட்டு திரும்பியுள்ளனர் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள்.
ரத்தீஷை பிடித்தால் அனைத்து ஊழல்களுக்கும் உரிய அனைத்து ஆதாரங்களும் சிக்கி விடும் என்ற நம்பிக்கையில் அங்கு சென்ற போது வீடு பூட்டப்பட்டிருந்தது ED க்குபெரும் ஏமாற்றத்தை அளித்தது. இதன் மூலம் டாஸ்மாக் ஊழலின் முக்கியப் புள்ளியாக சந்தேகிக்கப்படும் தொழிலதிபர் ரத்தீஷ், அமலாக்கத்துறையின் சோதனைகளுக்கு முன்னரே அவர் லண்டன் தப்பிச் சென்று விட்டதாகவும், அவருடன் அவரது நெருங்கிய நண்பர் டான் பிக்சர்ஸ் உரிமையாளருமான ஆகாஷ் பாஸ்கரனும் சேர்ந்து தலைமறைவாகி விட்டதாகவும் கூறப்படுகிறது.
ரத்தீஷை பிடிக்க அமலாக்கத்துறை தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வரும் சூழலில் ரத்தீஷ் பற்றிய முழு விவரங்களை அமலாக்கத்துறை தற்போது தோண்டித் துருவ தொடங்கியுள்ளது.
ரத்தீசுக்கு சினிமா துறையில் ஏராளமான தொடர்புகள் உள்ளதாகவும், அதிகாரிகளுக்கு பலான ஆசை காட்டி சாதித்துக் கொள்வார் எனவும், அதற்கேற்றாற் போல மது, மாது, போதை என ரத்தீஷின் பகட்டான வாழ்க்கை மற்றும் விருந்து கலாச்சாரம் குறித்து பல தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை கிளப்பியுள்ளன.
சென்னை, பட்டினப்பாக்கம், எம்ஆர்சி நகரில் உள்ள ரத்தீஷின் அடுக்குமாடி குடியிருப்பு வீட்டில் வாரந்தோறும் நடிகைகள் கலந்து கொள்ளும் போதை விருந்து நடந்து வந்ததையும் அமலாக்கத்துறை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். அந்த விருந்தில் தற்போது தமிழ்நாட்டின் டிராகன் பட நடிகை, சூப்பர் நடிகை மற்றும் ஐபிஎஸ் அதிகாரி ஒருவரும் வாரந்தோறும் வந்து கலந்து கொண்டு சென்றதும் தெரியவந்துள்ளதாம்.
அமலாக்கத்துறை சோதனைக்கு முந்தைய நாள் சென்னையில் நடைபெற்ற ஒரு ஆடம்பர விருந்தில் ரத்தீஷ் கலந்து கொண்டதையும் சிசிடிவிக்கள் மூலம் அமலாக்கத்துறை அதிகாரிகள் சேகரித்துள்ளார்களாம். அரை குறை ஆடை அணிந்த ஒரு பெண் தனது காரில் இருந்து வந்து இறங்கி ரத்தீஷ் தங்கியுள்ள CEEBROS அடுக்குமாடி குடியிருப்புக்குள் செல்லும் போன்ற சிசிடிவி காட்சிகளை அமலாக்கத்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
ரத்தீஷ் வீட்டில் நடந்த மது விருந்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகள், ரஷ்ய மாடல் அழகிகள், போதைப் பொருட்கள் மற்றும் விலையுயர்ந்த பரிசுகள் இடம் பெற்றிருந்ததாகவும் கூறப்படுகிறது. ஒவ்வொரு நடிகைக்கும் 35 லட்சம் ரூபாய் மதிப்பிலான பரிசுப் பொருட்கள் ஆடம்பர கைக்கடிகாரங்கள், விலையுயர்ந்த கைப்பைகள் மற்றும் வாசனை திரவியங்கள் வழங்கப்பட்டதாகவும் தகவல்கள் வைரலாகின்றன.
இந்த வகையில் ரத்தீஷுடன் நெருங்கிய கூட்டாளிகளாக சூப்பர் நடிகையும், அவரது இயக்குநர் கணவர் மற்றும் ஐபிஎஸ் அதிகாரி, தலைநகரில் பணிபுரியும் உயர் காவல்துறை அதிகாரி ஒருவர் என ஒரு நீண்ட பட்டியலை சம்மன் அனுப்புவதற்காக அமலாக்கத்துறை தயாராக வைத்துள்ளார்களாம்.
பட்டியலில் உள்ள ஐபிஎஸ் அதிகாரிகள் ரத்தீஷுடன் இணைந்து ரியல் எஸ்டேட் தொழிலில் கோடிகளை அள்ளியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளதாம். மேலும் சூப்பர் நடிகையும், ரத்தீஷும் டாஸ்மாக் ஊழல் மூலம் வந்த கருப்பு பணத்தை வெள்ளையாக்குவது குறித்து உரையாடல்கள் நடத்தியதாகவும், இதற்கு ஆதாரமாக அவர்கள் ஒன்றாக எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளதையும் அமலாக்கப்பிரிவினர் விசரித்து வருகின்றார்களாம்.
இதனால் நடிகைக்கும், அவர் கணவருக்கும் சம்மன் அனுப்பி விசாரணை நடத்த அமலாக்கப்பிரிவு முடிவு செய்துள்ளதாம். ரத்தீஷ் தலைமறைவாகி விட்டதால் எங்கே தாங்களும் சிக்கிக் கொள்வோமோ என்ற பயத்தில் அந்த நடிகையும் அவர் கணவரும் கொஞ்ச நாளைக்கு சென்னை பக்கம் வராமல் மறைவாகவே இருந்து கொள்ளலாம் என்ற முடிவில் வெளி நாட்டிலேயே தஞ்சம் அடைந்து விட்டார்களாம்.
– குட்டிப்புலி