தமிழக காவல்துறையின் சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் உள்ளிட்ட 3 கூடுதல் டிஜிபிக்களுக்கு டிஜிபி அந்தஸ்தும், 7 ஐ.ஜி.க்கள் கூடுதல் டிஜிபிக்களாகவும், 3 டி.ஐ.ஜி.க்களுக்கு ஐ.ஜி. அந்தஸ்தும், 17 எஸ்.பி.க்களுக்கு டி.ஐ.ஜி. அந்தஸ்தும் வழங்கப்பட உள்ளது. இந்த 30 ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு ஜனவரி மாதம் முதல் தேதியே பதவி உயர்வு வழங்குவது தொடர்பான பட்டியல் தலைமைச் செயலாளருக்கு டிஜிபி அலுவலகத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதனால் வரும் ஜனவரி மாதம் முதல் தேதியிலேயே பதவி உயர்வுடன் தேர்தல் டிரான்ஸ்பர் உள்ளிட்ட அதிரடி இட மாறுதல்களும் நிகழவுள்ளதாக டிஜிபி அலுவலக வட்டாரங்கள் கூறுகின்றன.
2026ம் ஆண்டுக்கான ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்குவதற்கான பைல் தமிழக தலைமை செயலாளருக்கு டிஜிபி மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதன்படி தற்போது கூடுதல் டிஜிபிக்களாக உள்ள சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம், சைபர் க்ரைம் கூடுதல் டிஜிபி சந்தீப் மிட்டல், பொருளாதார குற்றப்பிரிவு கூடுதல் டிஜிபி பாலநாகதேவி ஆகியோர் டிஜிபி அந்தஸ்து பெறுகின்றனர்.
சந்தீப் மிட்டல் அன்பு அனிஷா ஹுசைன் நஜ்முல் ஹோதா
இதே போல சிபிசிஐடி ஐ.ஜி. அன்பு, தென் மண்டல ஐ.ஜி. பிரேம் ஆனந்த் சின்கா, சி.பி.ஐ.யில் பணியாற்றும் தீபக் எம். தாமோர், மேற்கு மண்டல ஐ.ஜி. செந்தில்குமார், சிபிசிஐடி ஐ.ஜி. அனிஷா ஹுசைன், நவீனமயமாக்கல் பிரிவு ஐ.ஜி. நஜ்மல் ஹோதா, ஐ.ஜி. மகேந்திர குமார் ரத்தோடு ஆகிய 7 ஐ.ஜி.க்கள் கூடுதல் டிஜிபி அந்தஸ்தை எட்டியுள்ளனர்.
மகேந்திர குமார் செந்தில் குமார் ரம்யா பாரதி
மேலும் மத்திய அரசுப் பணியில் உள்ள டி.ஐ.ஜி. ரம்யா பாரதி, பொன்னி, சோனல் மிஸ்ரா ஆகிய 3 பெண் டி.ஐ.ஜி.க்கள் ஐ.ஜி. அந்தஸ்து பெறுகின்றனர். மேலும் மத்திய அரசு பணியில் உள்ள எஸ்பிக்கள் ஜார்ஜி ஜார்ஜ், கலைச்செல்வன், அருண் சக்தி குமார், அரவிந்த் மேனன் ஆகியோரும், தமிழக அரசு பணியில் உள்ள ஷசாங் சாய், தேஷ்முக் சேகர் சஞ்சய், டாக்டர் தீபா கணிகர், ஓம் பிரகாஷ் மீனா ஆகிய நேரடி ஐ.பி.எஸ். அதிகாரிகளும், தமிழக ஐ.பி.எஸ். கேடர் அதிகாரிகளான மணிவண்ணன், அருளரசு, மகேஸ்வரன், சரவணன், டாக்டர் சாமிநாதன், ராஜசேகரன், ஜெயலட்சுமி, சிவகுமார், ஈஸ்வரன் உள்ளிட்ட 17 எஸ்.பி.க்கள் டி.ஐ.ஜி.க்களாகவும் பதவி உயர்வு பெறுகின்றனர்.
சோனல் மிஸ்ரா மணிவண்ணன் சரவணன்
தமிழக காவல்துறை வரலாற்றில் ஒரே சமயத்தில் 17 எஸ்.பி.க்களுக்கு டி.ஐ.ஜி. அந்தஸ்து கிடைப்பது இதுவே முதல் முறையாகும். டி.ஐ.ஜி.க்கள் போதுமான அளவில் இல்லாததால் நெல்லை, சேலம் ஆகிய சரகங்கள் பல மாதங்களாக காலியாக உள்ளன. இதனால் ஜனவரியில் அனை அனைத்தும் நிரப்பப்படும் என தெரிகிறது. இவர்களைத் தவிர மத்திய அரசுப் பணியில் உள்ள கண்ணாம்பாள், மதுவிலக்கு அமலாக்க பிரிவு எஸ்.பி. சாம்சன் உள்ளிட்ட சில அதிகாரிகள் சீனியர் எஸ்.பி. அந்தஸ்து பெறுகின்றனர்.
அருளரசு சிவக்குமார் ஈஸ்வரன் ஜெயலட்சுமி
இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களில் ஐ.எப்.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு ஜனவரி முதல் தேதி முதலே பதவி உயர்வு வழங்கப்படுவது வழக்கம். தமிழகத்தில் மட்டும் ஐ.எப்.எஸ். அதிகாரிகளுக்கு மட்டும் ஜனவரி முதல் தேதி முதல் பதவி உயர்வு வழங்கி விட்டு காவல்துறை அதிகாரிகளுக்கு நவம்பர், டிசம்பர் என ஆண்டு இறுதியில் கூட பதவி உயர்வுகள் வழங்கப்பட்டு ஐ.பி.எஸ். அதிகாரிகளை கடும் மன உளைச்சலுக்கு ஆளாக்கியதுண்டு.
பொன்னி
கடந்த சில ஆண்டுகளாகத்தான் ஜனவரி மாதமே பதவி உயர்வு வழங்கப்படுகிறது. இந்த ஆண்டோ நவம்பர் மாத இறுதியிலேயே ஜனவரி மாதத்திற்கான பதவி உயர்வு பட்டியல் டிஜிபி அலுவலகத்தில் இருந்து உள்துறை செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. டிசம்பர் முதல் வாரத்தில் தலைமை செயலாளர், உள்துறை செயலாளர், டிஜிபி உள்ளிட்ட அதிகாரிகள் தலைமையில் பேனல் கமிட்டி கூட்டம் நடத்தப்பட்டு பதவி உயர்வு வழங்குவதற்கான அனுமதி வழங்கப்படும்.
பின்னர் டிஜிபி அலுவலகத்தில் பதவி உயர்வு வழங்கப்படும் அதிகாரிகளுக்கான புதிய பதவிகள் வழங்க பேனல் கமிட்டி கூட்டம் நடத்தப்பட்டு புதிய பதவி இறுதி செய்யப்படும். அதோடு வரும் மே மாதம் தமிழக சட்டசபை தேர்தல் நடத்தப்பட உள்ளதால் 2 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் எஸ்.பி. முதல் கூடுதல் டிஜிபி வரையிலான சட்டம் ஒழுங்கு பிரிவு மற்றும் உளவுத்துறைகளில் பணியாற்றும் அதிகாரிகளை தேர்தல் ஆணையம் கண்டிப்பாக இடமாற்றம் செய்யும்.
இதற்கு முன்பாக தங்களுக்கு வேண்டிய அதிகாரிகளை அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் விருப்பப்படி நியமிப்பதற்கு ஏற்கனவே ஆளும்கட்சி மேலிடம் பரிந்துரைத்துள்ள அதிகாரிகளுக்கான பதவி இடங்கள் குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசனை நடத்தி பதவி வழங்கப்படவுள்ளதாக தெரிகிறது. பதவி உயர்வுக்கான அதிகாரிகள் பட்டியல் டிசம்பர் இறுதி வாரத்தில் வெளியிடப்பட்டு பின்ன ஓரிரு நாளில் பெரிய அளவிலான அதிரடி டிரான்ஸ்பர் பட்டியலும் வெளியாக உள்ளது. பதவி உயர்வு பெற்றவர்களும், புதிய அதிகாரிகளும் ஜனவரி முதல் தேதியில் பதவி ஏற்பதற்காக திட்டமிட்டு பைல்கள் வேகமாக மூவ் ஆகி வருகின்றதாம்.
இதோடு தமிழக சட்டம் ஒழுங்கு பதவியில் பொறுப்பு டிஜிபியாக வெங்கட்ராமன் இருந்துவரும் நிலையில் சீனியர் டிஜிபிக்களை நியமிக்கவே கூடாது என மூவர் கூட்டணி கங்கணம் கட்டி வருவதால் நிரந்தர டிஜிபி நியமிக்க வாய்ப்பில்லை. தற்போது சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக பணியாற்றும் டேவிட்சன் தேவாசீர்வாதத்திற்கு ஜனவரி முதல் தேதி முதல் டிஜிபி அந்தஸ்து வழங்கப்படுவதால் இவருக்கு உளவுத்துறை டிஜிபி பதவி வழங்கி கூடுதலாக சட்டம் ஒழுங்கு டிஜிபி பொறுப்பு பதவி வழங்க திட்டமிட்டுள்ளதாக டிஜிபி அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. உளவுத்துறை ஐ.ஜி. செந்தில்வேலன் இந்த பதவியில் 3 ஆண்டுகளுக்கு மேல் இருப்பதால் இவரை வேறு பதவியில் நியமிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இவர்களை தவிர கூடுதல் டிஜிபி அந்தஸ்து பெரும் பிரேமானந்த் சின்கா, அன்பு, செந்தில் குமார் ஆகியோர் தாம்பரம், அம்பத்தூர் மாநகர ஆணையர் பதவிகளுக்காக காய் நகர்த்தி வருகின்றனர். இவர்களோடு சென்னை மாநகர ஆணையர் அருணும் இடமாற்றம் செய்யப்படுகிறார். இவருக்கு பதிலாக அம்பத்தூர் மாநகர காவல் ஆணையர் சங்கர் இந்த பதவியில் நியமிக்கப்பட உள்ளார். சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி பதவிக்கும் அரசுக்கு வேண்டப்பட்ட அதிகாரியை நியமிக்க மேலிடம் திட்டமிட்டுள்ளது.
இருப்பினும் தேர்தல் நேரம் என்பதால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தங்கள் பதவிகளுக்கு எந்த பிரச்சினையும் வந்து விட கூடாது என்பதற்காக எஸ்.பி. முதல் கூடுதல் டி.ஜி.பி. பதவி உயர்வு பெரும் அதிகாரிகள் தங்களுக்கு சட்டம் ஒழுங்கு பதவிகள் வேண்டாம். எதாவது யூனிட்டில் தங்களுக்கு பதவி வேண்டும் என கூறி முக்கிய பதவி வேண்டாம் என டிஜிபியை சந்தித்து கேட்டு வருகின்றனராம்.
குறிப்பாக பல பெண் அதிகாரிகளும் நிர்வாக பிரிவு, தலைமையிட பிரிவு உள்ளிட்ட பதவிகளுக்கு போட்டிபோட்டு வருகின்றனராம். தேர்தலை ஒட்டி நடக்கும் இந்த ஐ.பி.எஸ். பதவி மாற்றம் அதிரடியான பதவி மாற்றமாகவும், மேலிடத்திற்கு வேண்டப்பட்ட அதிகாரிகளுக்கு முக்கியத்துவம் கிடைக்கும் மாற்றமாகவும் இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்கிறது டிஜிபி அலுவலக வட்டாரங்கள்.