தென்னிந்தியாவில் உள்ள புகழ்பெற்ற ஆன்மிகத் தலங்களில் ஒன்று நாகை மாவட்டம் நாகூரில் கடலோரம் அமைந்துள்ள நாகூர் ஆண்டவர்கள் தர்கா ஷரீப். அதிசயங்களும், அற்புதங்களும் நிறைந்த புனித மிகுந்த இடமாக கருதப்படும் நாகூர் தர்காவுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் ஜாதி, மத, பேதமின்றி இங்கு வந்து தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றிச் செல்கின்றனர்.
நாகூர் தர்கா ஷரீப்பில் ஜீவசமாதி அடைந்துள்ள நாகூர் மக்களால் “எஜமான்” என அன்புடன் அழைக்கப்படும் செய்யதுனா ஷாகுல் ஹமீது காதிர் வலி என்னும் நாகூர் ஆண்டவர்களின் புனித நினைவிடத்துக்கு குறைகளுடன் செல்பவர்கள் அங்கிருந்து திரும்பும் போது சிரித்த முகத்துடன் செல்வதை பார்க்க முடிகிறது என்கின்றனர் அங்கு வாடிக்கையாக வந்து செல்லும் பக்தர்கள்.
செய்வினைகளுக்கு 40 நாட்களில் தீர்வு
நாகூர் ஆண்டவர்கள் தர்காவுக்கு சென்றால் செய்வினை, பில்லி, சூனியம், ஏவல், பேய் பிசாசுகளால் ஏற்படும் தொல்லைகளில் இருந்து குறைந்த பட்சம் ௪௦ நாட்களில் தீர்வு கிடைப்பதாக நம்புகின்றனர்.
குழந்தை பாக்கியம் தரும் அதிசய வெற்றிலை
இன்னொரு முக்கியமான அதிசயம் ஒன்று நாகூர் தர்காவுக்குள் அமைதியாக நடந்தேறுகிறது. குழந்தையில்லாத தம்பதிகள் நாகூர் தர்கா சென்று மனமுறுகி பிரார்த்தனை செய்தால், இறைவன் அருளால் குழந்தைப் பேறு கிடைக்கிறது என்பதுதான் அது. நாகூர் ஆண்டவர்கள் ஷாகுல் ஹமீது ஜீவசமாதிக்கு வெளிப்புறம் இடப்பக்கம் அவர்களது மருமகளார் சுல்தான் பீவி அம்மா அடக்கத்தலம் உள்ளது. அங்கு தரும் வெற்றிலையை குழந்தையில்லாத தம்பதி மனதார வேண்டிக் கொண்டு சாப்பிட்டால் நிச்சயம் குழந்தை பாக்கியம் கிட்டும் என்கின்றனர் அந்த பாக்கியத்தை பெற்றவர்கள்.
அதிசய ஐம்பொன் சங்கிலி
மற்றுமொரு அதிசயம் உடலில் உள்ள தீராத நோய்களை தீர்க்கும் அதிசய குடிநீர் நாகூர் தர்காவில் மிகப்பெரிய பொக்கிஷமாக விளங்குகிறது. நாகூர் அருகில் வாஞ்சூர் என்ற இடத்தில் நாகூர் ஆண்டவர்கள் ஐம்பொன் சங்கிலியை உடம்பில் அணிந்து கொண்டு இறைவனை நினைத்து மாதக்கணக்கில் தவம் மேற்கொண்டார்கள். அந்த சங்கிலி தற்போது நாகூரில் பெரிய பொக்கிஷமாக கருதப்படுகிறது. நாகூர் ஆண்டவர்களின் மகனார் சின்ன எஜமான் என அழைக்கப்படும் தாதா யூசுப் சாஹிப் சமாதிக்கு எதிரில் மேற்கூரையில் நாகூர் எஜமானின் ஐம்பொன் சங்கிலி கட்டப்பட்டுள்ளது.
தீராத நோய்கள் தீரும்
அந்த சங்கிலியில் நனைத்த நீரை பருகினால் உடலில் உள்ள தீராத நோய்கள் தீரும் என்றும், பாவ தோஷங்கள் விலகி மகிழ்ச்சியான வாழ்வு உண்டாகும் என்ற நம்பிக்கையும் உள்ளது. மேலும் அந்த நீரை பேய், பிசாசு, சூனியம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முகத்தில் அடித்து, குடிக்கவும் கொடுத்தால் கெட்ட ஆவிகளால் ஏற்படும் தொல்லைகள் நீங்கும். நாகூருக்கு செல்லும் பக்தர்கள் கட்டாயம் அந்த நீரை வாங்கிப் பருகுகின்றனர். இந்த விஷயம் அங்கு வரும் பெரும்பாலோனோருக்கு தெரிவதில்லை. கேள்விப்பட்டவர்கள் மட்டுமே அதனை வாங்கிப் பருகுகின்றனர்.
அறிவியல் ரீதியான உண்மை
நாகூர் எஜமானின் இந்த ஐம்பொன் சங்கிலி நீரை அருந்துவதன் மூலம் ஒரு வகையில் அறிவியல் ரீதியாகவும் உடலுக்கு நன்மைகள் கிடைக்கின்றன. ஐம்பொன் என்பது தங்கம், வெள்ளி, செம்பு, ஈயம், துத்தநாகம் ஆகிய ஐந்து உலோகங்களின் கலவை. இந்த ஐம்பொன் உலோகங்களை நீரில் கலந்து அருந்துவதன் மூலம், உடலுக்குத் தேவையான உலோகச் சத்துக்கள் கிடைத்து, உடல் மற்றும் மன நலனை மேம்படுத்தும் என்பது ஐதீகமாகும்.
தண்ணீர் பாட்டிலை வாங்கிக் கொண்டு சென்று நாகூர் தர்கா பணியாட்களிடம் கொடுத்தால் அவர்கள் ஒரு சிறிய பாத்திரத்தில் அந்த தண்ணீரை ஊற்றி மேற்கூரையில் உள்ள நாகூர் ஆண்டவர்களின் ஐம்பொன் சங்கிலியில் நனைத்து தருகின்றனர். அதனை பருகி ஏராளமான பக்தர்கள் நலமடைகின்றனர். உண்மையான இறையச்சத்துடன், நம்பிக்கையுடன் பருகுபவர்களுக்கு மட்டுமே அவர்களது பிரார்த்தனை பலிக்கிறது என்கின்றனர் நாகூரில் வாழும் நாகூர் ஆண்டவர்களின் வாரிசுகளான சாஹிப்மார்கள்.