சிவ. செல்லையா –
தமிழக காவல் துறை தலைவர் பதவிக்கு தற்போதைய டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு மேலும் 4 மாதங்கள் பதவி நீடிப்பு வழங்க வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கை ஏற்கப்படவில்லை என மத்திய பணியாளர் தேர்வாணைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் புதிய டிஜிபியை தேர்வு செய்யும் பணியை டிஜிபி அலுவலகம் தொடங்கியுள்ளது.
தமிழக காவல்துறை தலைவராக தற்போது பணியாற்றிவரும் சங்கர் ஜிவால் கடந்த 2023 -ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பொறுப்பேற்றுக்கொண்டார். வரும் ஆகஸ்ட் மாதம் பதவி ஓய்வுபெற உள்ள நிலையில் புதிய டிஜிபி நியமனத்தை டிஜிபி அலுவலகம் கடந்த ஜூன் மாதமே தொடங்கி இருக்க வேண்டும். ஆனால் இதுவரை புதிய டிஜிபி தேர்வு பட்டயலை டிஜிபி அலுவலக நிர்வாக பிரிவு தொடங்கவில்லை.

இதுபற்றி காவல் துறை வட்டாரத்தில் விசாரித்தபோதுதான் தற்போதைய டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு மேலும் 4 மாதம் டிஜிபியாக பதவி நீடிப்பு வழங்குவதற்கான கடிதம் மத்திய பணியாளர் தேர்வாணையம் மற்றும் மத்திய உள்துறைக்கு அனுப்பிவைக்க பட்ட தகவல் வெளியாகி புதிய டிஜிபி கனவில் இருந்த அதிகாரிகளுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில்தான் டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு பணி நீடிப்பு வழங்குவதற்கான தமிழக அரசின் பரிந்துரையை மத்திய பணியாளர் தேர்வாணையம் ஏற்கவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே தமிழக டிஜிபியாக ராமானுஜம், அசோக்குமார் ஆகியோருக்கு பதவி நீடிப்பு வழங்கப்பட்டதற்கு எதிராக சீனியர் அந்தஸ்தில் உள்ள டிஜிபிக்குகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தபோது இனி யாருக்கும் பதவி நீடிப்ப வழங்க கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இருப்பினும் 4 மாதங்கள் பதவி நீடிப்பு கிடைக்கு என தமிழக அரசு கருதியே பரிந்துரைத்தது.
ஆனால் பதவி நீடிப்பு வழங்க முடியாது என மத்திய பணியாளர் தேர்வாணையம் தெரிவித்ததால் புதிய டிஜிபி தேர்வு செய்வதற்கான பட்டியலை டிஜிபி அலுவலகம் தொடங்கி உள்ளது. தற்போதைய சீனியாரிட்டி பட்டியலின்படி தமிழ்நாடு போலீஸ் அகாடமி இயக்குனராக உள்ள சந்தீப் ராய் ரதோர்தான் டிஜிபி பட்டியலில் முதல் இடத்தில உள்ளார். இந்த பதவிக்கு சந்தீப் ராய் ரத்தோர் வந்தால் கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்கும் மேல் பதவியில் நீடிக்க வாய்ப்பு கிடைக்கும். காரணம் சந்தீப் ராய் ராதோருக்கு இன்னும் 3 1/2 ஆண்டுகள் பதவி ஓய்வுபெற அவகாசம் உள்ளது.